பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் தொழில் முனைவோருக்கான பயிற்சிப்பட்டறை (StartNext-2020)
StartNext என்பது பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் புதிய முயற்சியாகும். அனுபவம் வாய்ந்த வியாபார உரிமையாளர்களையும் புதிதாக வியாபார நிறுவனங்களைத் தொடங்க விருப்பமுடையவர்களையும் ஊக்குவிக்குமுகமாக பிரம்ரன் மாநகரசபையுடன் இணைந்து பிரம்ரன் தமிழ் ஒன்றியமானது இரண்டாவது ஆண்டாக நடைமுறைப்படுத்த இருக்கும் நிகழ்வே StartNext ஆகும். ஊக்குவிப்பும் தகுந்த வழிகாட்டலும் இன்மையால் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வரமுடியாமலிருக்கும் ஒத்த எண்ணங்கொண்ட இளையோருக்கான பயிற்சிப்பட்டறைகள், விளக்கவுரைகள் மற்றும் ஒவ்வொருக்கொருவர் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களைக் கொண்ட ஒரு நாள் நிகழ்வாகும்.
கடந்த வருடம் முதன்முறையாக இந்த நிகழ்வானது பிரம்ரன் நகரசபை மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டமை எல்லோரும் அறிந்ததே. கனடாவில் பெரிதும் வெற்றிகரமாக இயங்கிவரும் வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்கள், அடுத்த சந்ததி பெருநிறுவனத் தலைவர்கள், உள்ளூர் இளையோருடன் கைகோர்த்துப் பயிற்சிப் பட்டறைகளையும் பல சுவாரஸ்யமான செயற்பாடுகளையும் நடத்தினார்கள். இந்தப் பயிற்சிப் பட்டறையானது புதிய நிறுவனங்களைத் தொடங்குவது சம்பந்தமான சிந்தனைகளை உருவாக்கும் நுட்பங்களையும் வியாபார யுக்திகளையும் விளம்பர முறைகளையும் இளையோருக்கு வழங்கியுள்ளது. சிறுவணிக உரிமையாளர்களுக்கான விற்பனை, சந்தைப்படுத்தல், நிதிவாய்ப்புகள், தனிப்பட்ட வளர்ச்சி போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது. இளையோர், வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழில் வல்லுனர்களுடனான தொடர்பாடல் அமர்வை ஏற்படுத்தி அனைவருங் கலந்துபேசி ஒருவருக்கொருவர் அறிமுகஞ் செய்யக்கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. கனடாவில் வெற்றிகரமான தொழில் நிறுவனத்தை நடத்திவரும் கலாநிதி ரவி குகதாசன் அவர்கள் முதன்மைப் பேச்சாளராகக் கலந்துகொண்டு தனது வெற்றிப்பாதையில் சந்தித்த இடர்பாடுகளையும் அவற்றை எதிர்கொண்டபோது ஏற்பட்ட சவால்களையும் பகிர்ந்துகொண்டமை பாராட்டுக்குரியது. இசை நிகழ்ச்சிகளுடன் கூடிய சுவையான இரவு விருந்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது.
எமது அமைப்பால் வரும் 12-19-2020 சனிக்கிழமை அன்று நடைமுறைப்படுத்த இருக்கும் நிகழ்வில் எமது இளந்தலைமுறையினருக்குத் தொழில் முனைவுக்கான பயிற்சி நெறியை எல்லா மட்டத்திலும் பயிற்றுவிப்பதன் மூலம் அவர்களது நிதி சம்பந்தமான அறிவையும் தொழில் தொடக்க நடைமுறையையும் இளவயதிலேயே மெருகூட்டுவதாக அமையும் என்பதுடன் பரந்துபட்ட பார்வையாளர்கள் மத்தியில் தொழில்முனைவுக் கலாச்சாரத்தை உருவாக்க உதவும் என்பது எமது அசைக்கமுடியாத நம்பிக்கையாகும். இந்நிகழ்வில் பங்குபற்றுவதனால் கிடைக்கும் நன்மைகளை மூன்று முக்கிய பிரிவுகளாகச் சுருக்கலாம்.
- நம்பிக்கையையும் திறனையும் கட்டியெழுப்புதல்
- கல்வியறிவையும் அனுபவத்தையும் மெருகூட்டுதல்
- வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் நிறுவனத்தொடக்கத்தை சாத்தியமாக்குதல்
இளந்தொழில் முனைவோர் உண்மையாக வெற்றிபெறுவதற்கு அவர்களது நம்பிக்கையை வளர்த்து வாய்ப்பைப் பெறுவதையும் தோல்வியைத் தழுவும்போது அதிலிருநது மீள்வதற்கான வழிமுறைகளையும் கற்பித்து தொழில்முனைவுபற்றி உணர்ந்து அதனைச் சாத்தியமான தேவையாக்குதல் இன்றியமையாததாகும். இளையோர் தங்களது திறன்களை அதிகரிப்பதனால் நம்பிக்கையைப் பெறமுடியும்.
இன்றைய கல்விமுறையானது பரீட்சை முறையை வலியுறுத்துகிறது. மேலதிக பயிற்சிகளுக்கோ அன்றி அதற்கான முதலீட்டுகளையோ வலியுறுத்துவதில்லை என்பது பெற்றோரும் கல்வி கற்பிப்போரும் ஏற்றுக்கொள்ளும் விடயமாகும். புதிய கண்டுபிடிப்புக்களை நோக்கிய கல்வி முறைக்குப் போதிய நேரமும் அதற்கான கருவிகளும் வழிகாட்டுதல்களும் தேவையாகவுள்ளன. படைப்பாற்றலுக்கான பாதையை உருவாக்குவதற்குக் கல்வி முறையானது தடையாக இருக்கக் கூடாது. இந்த வகையில் எமது இளஞ்சந்ததியினருக்கு தொழில்முனைவு பற்றிய அறிவை மேம்படுத்தி அவர்கள் குழுப்பணி மற்றும் நிதி பற்றிய அறிவைப் பெற்று தங்கள் எதிர்காலத்தை நோக்கிய உயர்வுக்கு வழிவகுப்பதே எமது பயிற்சிப் பட்டறையின் முக்கிய குறிக்கோளாகும்.
அனைவரும் மேற்கூறிய நன்மைகளை உணர்ந்து, கீழுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி நிகழ்வில் பங்குகொண்டு பயன்பெறுமாறு பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தின் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் பெயர்களைப் பதிவு செய்யுங்கள்! பங்கு பற்றுங்கள்! பயன்பெறுங்கள்!